புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான கட்டுரை
இந்தக் கோவிட்-19 வீடடங்கு இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. உயர்நிலை வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளி கூடிய விரைவில் திறக்கும் என்பதுபோன்ற செய்திகள் கசிந்தாலும் மற்ற வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளி திறக்கும் சுவடே தெரியவில்லை. எதுவும் உறுதியற்ற இந்த நிலையில் எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளைப் பயன்தரும் வகையில் நடத்தலாம் என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுகிறது.
சமீபத்திய ஆய்வு ஒன்று இந்தியாவில் 56% குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என்று அறிவிக்கிறது. இந்திய மக்களின் வருமான நிலவரத்தைப் பார்த்தால் இந்தச் சதவீதம் இதைக்காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஸ்மார்ட்போன்களின் தரம் அவற்றின் விலையைப் பொறுத்து மாறுபடுகிறது. ரூ. 6000-த்திலிருந்து வாங்கலாம் என்றாலும் குறைந்த விலை போனின் தரம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. உறவினர் ஒருவருக்கு அவரிடம் படித்த மாணவர்கள் ரூ. 5000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அதை என்னிடம் கொண்டுவந்து இதில் வாட்சப், முகநூல் எல்லாம் போட்டுக்கொடு என்றார். முதலில் அதன் குறைந்த அளவு மெமரியினால் டெலிபோன் எண்களைக் கூட சேமிக்கமுடியவில்லை. மேலும் ஒரு சில ஆயிரங்களைப் போட்டு ஒரு மெமரி கார்டைப் போட்டால்தான் அதைப் பயன்படுத்தவே முடியும். அதில் இருக்கும் காமிராவின் பிக்ஸல் அளவும் அதன் தொடுதிரையின் ரிசொலுஷனும் என்ன தரத்தில் இருக்கும் என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்ளலாம்.
சரி, ஓரளவுக்கு முதல் போட்டு ஒரு 10000 ரூபாய்க்கு நல்ல போன் ஒன்றை வாங்கிவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அத்தோடு முடிந்ததா? அதற்கு டேட்டா பேக் போடவேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வேண்டுமென்றால் அதற்கு மாதம் ரூ. 250 மதிப்புக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். ஆனால் கல்வித்துறையின் பரிந்துரைப்படிஉயர்நிலை வகுப்புகளுக்கு 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். இதற்கு 1 ஜிபி டேட்டா போதுமா? வகுப்புகள் முடிந்த பிறகு பாடங்களும் குறிப்புகளும் வாட்சப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பிறகு குழந்தைகள் டெஸ்ட் அல்லது அசைன்மெண்டுகளை எழுதி ஆசிரியரின் பார்வைக்கு அனுப்பிவைக்க வேண்டியிருக்கிறது. இதற்குப் பிறகு, சும்மா வீட்டுக்குள் அடைந்து இருக்கும் நேரத்தில் பொழுதைப் போக்க பெரும்பாலான குழந்தைகள் இணையத்தைத்தான் நாடுகிறார்கள். நண்பர்களுடன் அரட்டை, நண்பர்களும் ஆதர்ச நடிக நடிகையரும் விளையாட்டு வீரர்களும் வேறு ஆளுமைகளும் அதிகமாகப் புழங்கும் இன்ஸ்டாகிராம், முகநூல், சினிமா தளங்கள் என எல்லாவற்றையும் பார்க்க 1 ஜிபி டேட்டா எப்படிப் போதும்? பல வீடுகளில் இரண்டு குழந்தைகளும் வகுப்புகளில் கலந்துகொண்டு படிக்கவேண்டி இருக்கிறது.
என்ன சொன்னாலும் சிறிய திரையைக்கொண்ட ஸ்மார்ட்போனில் தொடர்ச்சியாக முகநூலையும் வாட்சப்பையும் இணையத்தையும் மேய்ந்ததிலும் ஆன்லைன் கேம்ஸ் மற்ற விளையாட்டில் மூழ்கியதிலும் சிலரின் மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமானதை மறுக்கவே முடியாது. பெரிய திரை கொண்ட மடிக்கணினியின் ஆரம்ப விலையே ரூ. 20000. எத்தனைக் குடும்பங்களில் ஏற்கனவே மடிக்கணினி இருக்கும்? எத்தனைக் குடும்பங்களால் இவற்றை உடனே வாங்கமுடியும். ஏற்கனவே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித்தான் குழந்தைகளைப் பெயர்பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் நடுத்தரக் குடும்பத்து மக்கள். இதில் மேல்செலவாக இதையெல்லாம் செய்ய பணத்துக்கு எங்கே போவது. வீட்டில் வேலை செய்யும் பெண்ணொருவர் இரண்டு குழந்தைகளையும் படிக்கவைக்க வருடத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்வதாகச் சொன்னார். குடும்ப வருமானம் வருடத்துக்கு 2 லட்ச ரூபாய்க்குள்தான். இந்தக் கொரோனா சமயத்தில் கணவன் மனைவி இருவருக்கும் வேலையில்லை. கிடைக்கும் சொற்பக் காசில் அரிசி பருப்பு வாங்குவார்களா? ஸ்மார்ட்போனும் மடிக்கணினியும் வாங்குவார்களா?
இதில் இன்னொரு உளவியல் சிக்கலும் இருக்கிறது. ஸ்மார்ட்போனை இதுவரை பொழுதுபோக்குக்குப் பயன்படுத்திப் பழகிவிட்டோம், நாமும் நம் குழந்தைகளும். இயற்கையாகவே குழந்தைகள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகிறார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதுதானே மனித இயல்பு. வகுப்பு நேரத்தில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும் கவனம் சிதறி அந்தப் போனிலோ கணினியிலோ வேறு இணையதளத்துக்குப் போய் நேரத்தைக் கழிக்கலாம். குழந்தைகளைச் சொல்லப் போய்விட்டோமே. கணினியில் வேலை செய்யும்போது எத்தனை கவனச்சிதறலை எல்லாம் தெரிந்த பெரியவர்களான நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. சில மணித்துளிகளுக்கு ஒரு முறை வாட்சப்பையும் முகநூலையும் எட்டிப் பார்க்காமல் கண்ணைக் கட்டிக்கொண்டு வேலை பார்க்கமுடிகிறதா நம்மால்?
தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி இருக்கிறது. ஏற்கனவே, சில வகுப்புகளுக்கு தொலைக்காட்சி வழியாகப் பாடங்கள் நடத்தவும்படுகிறது. இது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்றாலும் கவனம் சிதறாமல் மாணவர்களுக்கு 'ஆன்லைன் வகுப்புகளை' நடத்துவதற்கான உத்திகளை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் மின்வழிக்கற்றல் (Elearning) நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒரு மேசையில் அமர்ந்து விவாதித்துப் பலனளிக்கும் வழிமுறைகளைப் பட்டியலிடவேண்டும்.
தொலைக்காட்சிப் பாடங்களைத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கவனம் சிதறாமல் கேட்க வேண்டுமென்றால் அவற்றில் இசை, நடனம், எளிய உடற்பயிற்சிகளையும் இணைக்கவேண்டும். கூடவே உடலையும் கை காலையும் அசைப்பதற்கு 15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வகுப்பில் சிறிய இடைவேளை கொடுக்கவேண்டும். ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசுவதுபோலவே பேசலாம். பழைய தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பேராசிரியர் நன்னன் அவர்கள் இப்படித்தான் பேசுவார். இது ஒரு ஆசிரியரோடு குழந்தைகளுக்கு ஒட்டுதலை ஏற்படுத்தும். அவ்வப்போது குட்டிக்கதை, நகைச்சுவை துணுக்கு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். வானொலியில் தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்களின் 'இன்று ஒரு தகவலை' தவறாமல் கேட்டது இதற்குத்தானே.
இந்தக் கவன ஈர்ப்பு உத்திகள் எல்லோருக்கும் எளிதில் கைவராது. எனவே, இவற்றை எங்கே எப்படிச் செய்யலாம் என்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவது அவசியம். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் முடிவுகள் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்த மின்வழி அல்லது தொலைக்காட்சிவழிக் கற்றல் முறைகளுக்கு ஆசிரியர்களைத் தயார்செய்வது இன்றியமையாதது ஆகிறது. இதை அரசாங்கமும் கல்வித் துறையைச் சார்ந்த நிபுணர்களும் கல்வியாளர்களும்தான் முன்னெடுக்க வேண்டும்.
"அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற மகாகவி பாரதியின் சொல்லை மனதில் வைக்கவேண்டும். நம் குழந்தைகள்தான் வருங்காலத்தின் தூண்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கட்டிவளர்த்த எல்லோருக்கும் கல்வி என்ற சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் இடிந்துவிடாமல் பேணி அதை நம் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் படிக்கற்களாக மாற்றவேண்டும். எல்லோரும் ஒன்றாகக் கைகோர்த்து செயல்படவேண்டும்.
#Puthiya_Thalaimurai
# புதிய_புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான கட்டுரை தலைமுறை_இணையதளம்