ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

உலக மகளிர் தினம் 2021 - எதிர்ப்பு தெரிவிப்பதைத் தெரிவுசெய்

 

இன்று உலக மகளிர் தினம். இந்த வருடத்தின் கருப்பொருள் #Choose_to_Challenge, 'எதிர்ப்பு தெரிவிப்பதைத் தெரிவுசெய்' என்று பொருள். 

 
நமக்கு எளிதாகக் கிடைக்கும் பல விஷயங்கள் உலங்கெங்கும் உள்ள மற்ற பெண்களுக்கு அப்படியே வாய்ப்பதில்லை என்பதை நினைவில்கொள்வோம்.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் உலகமே திரும்பிப்பார்த்து வியந்த, கொண்டாடிய பெண் கவி அமண்டா கோர்மனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிந்திருக்கும் செய்தியைப் பார்த்தாலே தெரியும். 
 
"நான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது என்னை ஒரு பாதுகாவலர் பின்தொடர்ந்தார். "உன்னைப் பார்த்தால் சந்தேகத்துக்குரியவளைப்போல இருக்கிறாய். நீ இங்குதான் வசிக்கிறாயா?" என்று கேட்டார். என் வீட்டின் சாவியைக் காண்பித்துவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தன் தவறுக்கு மன்னிப்பேதும் கேட்காமல் அங்கிருந்து சென்றார் அந்தப் பாதுகாவலர். கறுப்புப் பெண்களின் உண்மையான வாழ்க்கை இதுதான். ஒரு நாள் உங்களைப் புனிதத்தின் வடிவமாகக் கொண்டாடுவார்கள், அடுத்த நாளே நீங்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுவீர்கள்.
 
ஆம், ஒருவகையில் அந்தப் பாதுகாவலர் சொன்னது சரிதான். நான் ஒரு அச்சுறுத்தல்தான்: அநீதிக்கும், சமத்துவமின்மைக்கும், அறியாமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பவள். உண்மையைப் பேசும் நம்பிக்கையோடு இருக்கும் எவருமே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள்தான். அப்படி இருப்பதில் பெருமைகொள்கிறேன்."
நம்மைச் சுற்றியிருக்கும் நம் போன்ற பெண்களையே பார்த்துப் பழகிய கண்களுக்கு விளிம்புநிலையில் இருக்கும் பெண்களும் மனிதர்களும் பெரும்பாலும் தெரிவதில்லை. எல்லோரும் ஏதோ ஒருவகையில் சிரமப்படுகிறோம் என்றாலும் சில நேரங்களில் பெண்களாக இருப்பதாலேயே அது இரட்டிப்புச் சிரமமாகிவிடுகிறது. 
 
வாருங்கள், இந்த உலக மகளிர் தினத்தில் உறுதிகொள்வோம். சமத்துவமின்மையையும் பாலினப் பாகுபாட்டையும் எதிர்ப்போம். பெண்களின் சாதனைகளை, அது எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், கொண்டாடுவோம். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்கொண்ட உலகை உருவாக்குவோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக